ஞாயிறு, 8 நவம்பர், 2015

இயேசு பிறந்ததைக் (Christmas - கிறிஸ்துமஸ்) கொண்டாடலாமா?

இயேசு  பிறந்ததைக் (Christmas கிறிஸ்துமஸ் )கொண்டாடலாமா? கொண்டாடுங்கள் என்று வேதத்தில் இல்லை என்று நீங்கள் சொன்னது சரிதான். என்னுடைய விளக்கம்:

[1] யோபு, எரேமியா தன் பிறந்தநாளைச் சபிக்கிறார்கள்.
[2] ஏரோது தன் பிறந்தநாளன்று விருந்து செய்தான்.
[3] பழைய ஏற்பாட்டில் பார்வோனும் பிறந்த நாளன்று விருந்து செய்தான்.
[4] இயேசு தன்னுடைய பிறந்தநாளைக் கொண்டாடியதாக வேதத்தில் இல்லை. தனக்கு முப்பது வயதாகும்போது ஞானஸ்நானம் பெற்றார் என்று வாசிக்கிறோம். அன்று அவருடைய பிறந்த நாளாயிருக்க வாய்ப்புகள் அதிகம் என்று வேதபண்டிதர்களில் சிலர் சொல்கின்றனர்.

குமாரனாகிய இயேசு திரித்துவ தேவனில் ஒருவர், அவருக்கு துவக்கமும், முடிவும் இல்லை. அப்படியென்றால் பிறப்பு என்பது அவர் பூமிக்கு வந்த தேதி. இயேசுவின் பிறந்த தினம் அன்று:
- தேவதூதர்கள் திரளாகத்தோன்றி தேவனைத் துதித்தார்கள்.
- கிழக்கிலிருந்து வந்த சாஸ்திரிகள் அவரைப் பணிந்துகொண்டார்கள்.
- லூக்கா 2:15,16 தேவதூதர்கள் அவர்களை விட்டுப் பரலோகத்துக்குப் போனபின்பு, மேய்ப்பர்கள் ஒருவரையொருவர் நோக்கி: நாம் பெத்லகேம் ஊருக்குப் போய், நடந்ததாகக் கர்த்தரால் நமக்கு அறிவிக்கப்பட்ட இந்தக் காரியத்தைப் பார்ப்போம் வாருங்கள் என்று சொல்லி, தீவிரமாய் வந்து, மரியாளையும், யோசேப்பையும், முன்னணையிலே கிடத்தியிருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்.

இயேசு பிறந்த அந்த நாளை அனுசரிக்கலாம் (Observe), தவறில்லை. கொண்டாலாமா (Celebrate) என்றால், எப்படிக் கொண்டாடுகிறோம் என்பதில் பதில் உள்ளது. இந்துக்களைப்போல வெடிவெடித்துக் கொண்டாடக்கூடாது (காரணம், யாரேனும் வெடித்து கிறிஸ்துமஸ் அன்று இறந்து போனால், காயமடைந்தால் என்ற கேள்வி எழுகின்றது). உலகம் என்னும் மாயைக்குள்ளும் சென்றுவிடக்கூடாது (Worldliness). அப்படிச் செய்தால் உங்களுக்கும் உலகத்தாருக்கும் ஒரு வித்தியாசம் இல்லாமல் போகும். நாம் மரியாள், யோசேப்பு, குழந்தை-இயேசு என்று சிலைகளைச் செய்யாமலும், கொலு வைக்காமலும் இருக்கவேண்டும். புது சட்டை அணியலாம் தவறில்லை. விருந்து, பல ஆகாரம் சாப்பிடலாம் தவறில்லை. மற்றவர்களுக்கு இனிப்பு கொடுக்கலாமா? கொடுக்கும்போது இயேசு எதற்காக பூமிக்கு வந்தார் என்று சொல்லிக்கொடுத்தால் சரியாக இருக்கும். இல்லாவிட்டால் கொடுப்பதில் அர்த்தமில்லை. எஸ்தர் 9-ல் அவர்கள் பூரிம் என்னும் பண்டிகை கொண்டாடும்போது ஒருவருக்கொருவர் வெகுமானங்களை (Gifts) கொடுத்தார்கள், ஏழைகளுக்கு உதவி செய்தார்கள் என்றும் வாசிக்கிறோம் "sending portions one to another, and gifts to the poor". எனவே ஏழைகள், திக்கற்றபிள்ளைகள், விதவைகளுக்கு உதவிசெய்யுங்கள். அது தேவனுடைய பார்வையில் அருமையானதாக காணப்படும்.

அன்று முக்கியமாக சபைக்குச் சென்று பாட்டுப்பாடி தேவனுக்கு நன்றி சொல்லுங்கள். இயேசு இல்லாவிட்டால் நமக்கு இரட்சிப்பு ஏது? உங்களுடைய இருதயத்தில் இயேசு பிறந்திருக்கின்றாரா என்று கேளுங்கள். அதாவது நீங்கள் இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக்கொண்டுவிட்டீர்களா? உங்கள் பாவங்களை இயேசுவிடம் அறிக்கையிட்டு அவரை உங்கள் இருதயத்தில் ஏற்றுக்கொண்டு இரட்சிக்கப்படும் அனுபவமே கிறிஸ்து உங்களில் பிறக்கும் உண்மையான "கிறிஸ்துமஸ்" நாளாகும்!!

சிந்தியுங்கள்:
- லூக்கா 2:8 அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்.
இஸ்ரவேல் தேசமும், இந்தியா, சவுதி அரேபியா தேசமும் பூமத்திய ரேகைக்கு (Equator) மேலே இருப்பதால் குளிர் மற்றும் கோடைகாலங்கள் இந்த தேசங்களுக்கு ஒரே சமயத்தில்தான் வரும். இது விஞ்ஞானத்தின்படி உண்மை என்று நம்மனைவருக்கும் தெரியும். மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள். வயல்வெளி, இராத்திரி, மந்தையைக் காவல் என்று இந்த மூன்று வார்த்தைகளில் அது டிசம்பர் என்னும் குளிர் காலமாக இருக்க வாய்ப்பில்லை என்று சில வேதபண்டிதர்கள் சொல்கின்றார்கள், ஏனெனில் வடக்கே குளிர்காலத்தில் 8 முதல் 10 செல்சியஸ் (8-10* C) என்று வெட்பத்தின் அளவு இருக்கும், எர்மோன் மலைகளில் பனிக்கட்டிகள் (Snow/Ice) காணப்படும். அறுவடை முடிந்தபின்புதான் வயல் காலியாக இருக்கும். அப்போதுதான் மந்தையினை கிடை போடுவார்கள். எனவே அது வசந்தகாலம் (Spring) என்றும் கூறப்படுகின்றது. அதாவது மார்ச் - ஏப்ரல். அப்படி என்றால் என்றைக்கு கிறிஸ்துமஸ்?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக