யோவான்
இயேசுவின் பன்னிரண்டு சீடர்களில் மிகவும் முக்கியமானவர் யோவான். இயேசுவின் சீடர்களில் இளையவர் இவர் தான்.
கலிலேயா நாட்டிலுள்ள பெத்சாய்தாவில் செபதேயு, சலேமி ஆகியோரின் மகனாகப் பிறந்தார் யோவான். சலோமி, இயேசுவின் அன்னை மரியாவின் சகோதரி என்கிறது மரபு வரலாறு. செபதேயுவும், யோவானும் மீன்பிடி தொழிலைச் செய்து வந்தனர்.
திருமுழுக்கு யோவான் மனம் திரும்புங்கள் என அறைகூவல் விடுத்த போது யோவான் அவர் போதனைகளால் கவரப்பட்டார். பின்னர் திருமுழுக்கு யோவான் இயேசுவை மீட்பராக அடையாளம் காட்டிய போது இவரும் இயேசுவின் பால் மிகுந்த ஈடுபாடு கொண்டார்.
இயேசு அழைத்த போது தனது மீன் பிடித் தொழிலை அப்படியே விட்டு விட்டு இயேசுவைப் பின் தொடர்ந்தார். அதன் பின் இயேசுவின் அன்புக்குரிய சீடர் எனும் பெயரைப் பெற்றார். சீமோன் பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான், மூன்று பேரும் தான் இயேசுவின் மிக நெருக்கமான சீடர்களாக இருந்தனர். யோவானும், யாக்கோபுவும் சகோதரர்கள்.
ஒரு முறை தொழுகைக் கூடத் தலைவர் யாயிரின் மகள் இறந்து விட்டாள். அப்போது இயேசு, பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் மூவரை மட்டும் தன்னோடு அழைத்துக் கொண்டு சென்று இறந்த சிறுமியை உயிரோடு எழுப்பினார்.
இன்னொரு முறை இவர்கள் மூவருடனும் ஒரு உயர்ந்த மலைக்குச் சென்று இயேசு உருமாறினார். அவரது முகம் கதிரவனின் முகம் போல ஆனது. மோசேயும், எலியாவும் அங்கே தோன்றி அவரோடு பேசிக்கொண்டிருந்தார்கள்.
இயேசுவின் மரணத்துக்கு முந்தைய நாள் இரவில் அவர் தனது விண்ணகத் தந்தையிடம் பிரார்த்தனையில் ஈடுபட்டபோதும் இதே மூவர் கூட்டணியைத் தான் அவர் கூட வைத்திருந்தார். இப்படி இயேசுவின் பயணத்தின் முக்கியமான இடங்களிலெல்லாம் கூடவே இருந்தவர் எனும் பெயர் யோவானுக்கு உண்டு.
யோவானும், யாக்கோபும் “நீர் அரியணையில் இருக்கும் போது எங்களை உமது இரு பக்கமும் அமர வையுங்கள்” என்று கேட்டார்கள். இயேசுவோ அது தனது தந்தையின் விருப்பப் படி நடக்கும் என்றார்.
இயேசுவின் பணிவாழ்வில் கூடவே நடந்த யோவான், இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டிருக்கையிலும் அருகே நின்றிருந்தார். இயேசுவின் சீடர் என அடையாளப்படுத்திக் கொண்டால் படுகொலை செய்யப்படவும் வாய்ப்பு உண்டு. ஆனாலும் யோவான் பயப்படாமல் சிலுவை அருகே நின்றார். இயேசுவின் மீது தனக்கு இருந்த அன்பை வெளிப்படுத்தினார்.
எனவே தான் பின்னர் “அன்பில் அச்சத்திற்கு இடமில்லை; மாறாக நிறை அன்பு அச்சத்தை அகற்றிவிடும்” என தனது நூலில் எழுதினார். இயேசு தனது அன்னையை இவருடைய பொறுப்பில் தான் விட்டுச் சென்றார்
இயேசு இறந்தபின் யோவானும், பேதுருவும் மீண்டும் மீன்பிடிக்கும் தொழிலுக்குத் திரும்பினர். ஒரு நாள் இரவு முழுவதும் வலை வீசியும் எந்த மீனும் கிடைக்கவில்லை. காலையில் இயேசு கரையில் தோன்றி நின்று, “வலப்புறமாய் வலையை வீசுங்கள்” என்றார். மீன்கள் ஏராளமாய்ச் சிக்கின. இயேசுவை அடையாளம் கண்டு கொண்ட யோவான், பரவசத்துடன் படகிலிருந்து குதித்து ஓடி வந்தார்.
பெந்தேகோஸ்தே நாளில் தூய ஆவியானவரின் நிரப்புதலுக்குப் பின் ‘இடி முழக்கமாய்’ இருந்த யோவான், மென்மையாகவும், தெளிவாகவும் பணியாற்றும் திருத் தூதராக உருமாறினார். கிறிஸ்தவம் வளர முக்கியப் பங்காற்றினார்.
எபேசு நகரில் பணியாற்றினார். சின்ன ஆசியாவில் இருந்த ஏழு திருச்சபைகளும் இவரது கண்காணிப்பின் கீழ் இருந்தது. இவர் “திருச்சபையின் தூண்களில் ஒருவர்” என இவரைப் பற்றி பவுல் குறிப்பிடுகிறார். பைபிளில் உள்ள யோவான் நற்செய்தி, யோவான் 1, 2, 3 நூல்கள் மற்றும் திருவெளிப்பாடு போன்றவை இவர் எழுதிய நூல்கள்.
பைபிளில் இடம்பெறாத பாரம்பரியத் தகவல்களின் அடிப்படையில் இவர் ரோம பேரரசர் தொமித்தியன் காலத்தில் பெரும் துன்புறுத்தலுக்கு ஆளானார். ஒரு முறை கொதிக்கும் எண்ணைத் தொட்டியில் வீசப்பட்டார். ஆனாலும் இறைவன் அவரைக் காப்பாற்றினார்.
பத்மூ தீவில் சிறைவாசம் பெற்றார். அங்கிருக்கும் போது தான் பைபிளின் மிக முக்கியமான நூல்களின் ஒன்றான ‘திருவெளிப்பாடு’ நூலை எழுதினார். பின்பு பேரரசர் நெர்வா காலத்தில் விடுதலையானார். தொடர்ந்து இறைபணி செய்தார்.
வயது மூத்தவராக எழுந்து நடக்க வலுவில்லாமல் இருந்த போதும் தன்னைச் சந்திக்கும் அனைவரிடமும், “குழந்தைகளே ஒருவரில் ஒருவர் அன்பாய் இருங்கள்” என்பார். கடைசியில் பேரரசர் டிரோஜன் காலத்தில் இயற்கை மரணம் எய்தினார். இயேசுவின் சீடர்களில் படுகொலை செய்யப்படாமல் நீண்ட நாட்கள் வாழ்ந்த ஒரே சீடர் இவர் தான்.
அன்பாகவே வாழ்ந்த இயேசுவின் சீடரான யோவான், தாழ்மையுடன் அன்பைப் போதித்தார். அந்த தாழ்மையையும், அன்பையும் வாழ்க்கையில் கொண்டிருக்க வேண்டும் என்பதே நாம் அவரிடமிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய முக்கியமான பாடங்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக