இஸ்ரயேல் மக்கள் பெலிஸ்தியரிடம் அடிமைகளாக இருந்த காலம். அங்கு மனோவாகு என்றொருவர் இருந்தார். அவருக்குக் குழந்தைகளே இல்லை. தனக்கு ஒரு குழந்தைபாக்கியம் இல்லையே என மனோவாகுவின் மனைவி மிகவும் வருந்தினாள். அவள் கடவுளிடம் தொடர்ந்து மன்றாடிக் கொண்டே இருந்தார்.
கடவுளின் தூதர் ஒருநாள் அவளுக்கு முன்பாக வந்து நின்று, ‘ கடவுள் உனக்கு ஒரு குழந்தையைத் தரப் போகிறார். எனவே நீ இன்றுமுதல் திராட்சை ரசமோ, மதுவோ அருந்தக் கூடாது. தீட்டான எதையும் உண்ணக் கூடாது’ என்றார்.
‘எனக்கா ? குழந்தை பிறக்கப் போகிறதா ‘ அவள் மகிழ்ச்சியும் பரவசமும் கலந்து கேட்டாள்.
‘ஆம். கடவுள் உனக்கு ஒரு குழந்தையைக் கொடுத்து அவன் மூலம் பெலிஸ்தியர்களிடம் அடிமையாய் இருக்கும் இஸ்ரயேல் மக்களை விடுதலையாக்கப் போகிறார்’ தூதர் சொன்னார்.
அவள் எதுவும் பேசாமல் வியப்புடன் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தாள். தூதர் தொடர்ந்தார். ‘ உன் மகன் மிகப் பெரிய வீரனாக இருப்பான். அவன் கடவுளுக்கானவன், அவனுடைய தலையில் சவரக் கத்தி படவே கூடாது’.
அவள் இதையெல்லாம் கேட்டுத் திகைத்துப் போய் வீட்டை நோக்கி ஓடினாள். ஓடிச் சென்று தன் கணவனிடம் தான் கண்டதையெல்லாம் கூறினாள். அவனும் வியப்பும், சந்தேகமும் கலந்த மனநிலையில் இருந்தான்.
‘தூதர் என்ன சொன்னார் ?’ மனோவாகு கேட்டார்.
‘நமக்குப் பிறக்கும் மகன் பெரிய வீரனாக, பெலிஸ்தியரை வீழ்த்துபவனாக வருவானாம்’
‘வேறென்ன சொன்னார் ?’
‘ஏதோ சவரக் கத்தி அவன் தலையில் படக்கூடாது என்று சொன்னார்… என்று நினைக்கிறேன்’ அவள் பதில் சொன்னார்.
‘என்ன சொன்னார் என்பதே நினைவில்லையா ? கடவுள் சொன்ன எதையும் நாம் மீறிவிடக் கூடாது. அதற்காக கடவுள் என்ன சொன்னார் என்பதை மிகவும் தெளிவாய் அறிந்து கொள்வது அவசியம்’ என்ற மனோவாகு கடவுளை நோக்கி மன்றாடினார்.
‘கடவுளே இது உமது சித்தமென்றால் எங்களுக்கு இன்னொரு முறை காட்சி தந்து நாங்கள் மகனை எப்படி வளர்த்த வேண்டும் என்பதைச் சொல்லித் தாரும்’ என்று வேண்டினார்.
கடவுள் அவர்களுக்கு மீண்டும் ஒருமுறை தூதர் வழியாகக் காட்சிதந்தார். முதலில் சொன்ன அனைத்தையும் தூதர் அவர்கள் இருவரிடமும் சொன்னார். அவர்கள் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் கலந்த மன நிலையில் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பின் மனோவாகு அங்கேயே கடவுளுக்கு ஒரு ஆட்டுக் குட்டியைப் பலியாகச் செலுத்தினார். அவர் பலி செலுத்திய நெருப்பு மேல்நோக்கி எரிந்தபோது கடவுளின் தூதனும் அவர்களுக்கு முன்பாக மேலேறிச் சென்றார். மனோவாகும் அவர் மனைவியும் தரையில் வீழ்ந்து கடவுளை வனங்கினர்.
கடவுளின் தூதர் சொன்னபடியே மனோவாகுவின் மனைவி கர்ப்பமானாள். நீண்ட நாட்களுக்குப் பின் முதன் முதலாக கர்ப்பமான மகிழ்ச்சியில் அவர்கள் திளைத்தார்கள். மறக்காமல் கடவுளுக்கு நன்றி செலுத்தினார்கள்.
பேறுகாலம் வந்தபோது அவள் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். குழந்தைக்கு சிம்சோன் என்று பெயரிட்டார்கள். கடவுளின் தூதர் கட்டளையிட்டிருந்தபடி அவனுடைய தலை மயிரை அவர்கள் கத்தரிக்கவே இல்லை.
சிம்சோன் மிகவும் வலிமைசாலியாய் வளர்ந்தான். ஒருநாள் அவன் திமினா என்னும் ஊருக்குச் சென்றான். அங்கே ஒரு பெலிஸ்திய இளம் பெண்னைச் சந்தித்தான். அவளுடைய அழகில் சிம்சோன் தன்னை மறந்தான். மணந்தால் அவளைத் தான் மணக்கவேண்டும் என்று மனதுக்குள் முடிவெடுத்துக் கொண்டார். நேராக பெற்றோரிடம் வந்தான்,
‘அப்பா… எனக்கு ஒரு பெண்ணைப் பிடித்திருக்கிறது. அவளை எனக்கு மணமுடித்து வையுங்கள்’
‘கண்டிப்பாக… உனக்குப் பிடித்திருந்தால் போதும். யாரவள் ? யாருடைய மகள் ?’ தந்தை கேட்டார்.
‘அவள் ஒரு பெலிஸ்தியரின் மகள்’ சிம்சோன் சொன்னான்.
‘என்ன?? பெலிஸ்தியரின் மகளா ? நாம் அவர்களிடம் பெண் கொள்ளவோ, கொடுக்கவோ கூடாது என்பது கடவுளின் கட்டளை தெரியாதா ?’ தந்தை சினந்தார்.
‘எனக்கு அந்தப் பெண்தான் வேண்டும்…. ‘ சிம்சோன் பிடிவாதமானார்.
‘மகனே… நீ கடவுளிடமிருந்து வந்தவன். பெலிஸ்தியர்களோ விருத்தசேதனம் கூட செய்து கொள்ளும் பழக்கம் இல்லாதவர்கள். அவர்களோடு சம்பந்தம் வைப்பது நல்லதல்ல. அது கடவுளுக்கு விரோதமான செயல்’ தந்தை மீண்டும் மீண்டும் சொன்னார்.
சிம்சோனோ,’ நீங்கள் வந்து அந்தப் பெண்ணைப் பேசி முடித்து எனக்கு மனைவியாக்குங்கள். வேறு எதுவும் பேசவேண்டாம் ‘ என்றார். அதுதான் கடவுளின் சித்தம் என்பதை அறியாத பெற்றோர் வருந்தினர்.
சிம்சோன் தன்னுடைய மனதைக் கொள்ளை கொண்ட பெண்ணைக் காணச் சென்றார். போகும் வழியில் திடீரென ஒரு சிங்கம் ஆவேசமாக சிம்சோனின் மீது பாய்ந்தது. சிம்சோன் சிங்கத்தை தம்முடைய வெறும் கைகளினால் தூக்கி இரண்டாகக் கிழித்து எறிந்தார். அந்த முரட்டுச் சிங்கம் சிம்சோனின் கைகளில் சின்ன ஆட்டுக்குட்டியாகி துடிதுடித்து இறந்தது. சிம்சோன் இதை யாருக்கும் சொல்லவில்லை.
அவர் நேராகச் அந்தப் பெண்ணைச் சந்தித்துப் பேசினார். அவருக்கு அவளை மிகவும் பிடித்துப் போயிற்று. அவளும் அவரை விரும்பினார். சிறிது நாட்கள் இன்பமான காதல் பேச்சுகளில் செலவிட்டபின், சிம்சோன் அவளிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு தன் பெற்றோரிடம் திரும்பினார். வரும் வழியில் அவர் கொன்று போட்டிருந்த சிங்கத்தின் பிணத்தின் மேல் தேனீக்கள் கூடு கட்டித் தேனடை வைத்திருந்தன. அதை எடுத்துத் தின்றார்.
நேராகத் தந்தையிடம் சென்று,’ அப்பா எனக்கு அந்தப் பெண்னை மிகவும் பிடித்திருக்கிறது, அவளுக்கும் என்னைப் பிடித்திருக்கிறது. நீங்கள் பெண்ணின் தந்தையிடம் பேசி எங்களுக்கு திருமணம் செய்து வையுங்கள்’ என்றார்.
சிம்சோனின் தந்தை வேறு வழியில்லாமல் நேராக பெண்ணின் வீட்டுக்குச் சென்று பேசி திருமணத்தை நடத்தி வைத்தார். மணவிழா ஏழு நாட்கள் நடப்பதாக ஏற்பாடு. சிம்சோனின் தோழர்களாக ஊரிலுள்ள முப்பது இளைஞர்களை பெண்ணின் தந்தை அழைத்து வந்திருந்தார். அவர்கள் அவனோடு உண்டு குடித்து மகிழ்ந்திருந்தார்கள்.
சிம்சோன் அவர்களிடம்,’ நான் உங்களுக்கு ஒரு விடுகதை சொல்கிறேன். அதன் பதிலை நீங்கள் இந்த விருந்து முடியும் முன் கண்டு பிடித்துச் சொன்னால், உங்களுக்கு முப்பது நாற்பட்டாடைகளையும், முப்பது மேலாடைகளையும் அளிப்பேன். ஒருவேளை விடுகதைக்கான விடையை நீங்கள் கண்டுபிடிக்காவிடில் நீங்கள் எனக்கு முப்பது நாற்பட்டாடைகளும், முப்பது மேலாடைகளும் தரவேண்டும்’. என்றார். அவர்கள் சம்மதித்தனர்.
சிம்சோன் அவர்களிடம்,’ உண்பவனிடமிருந்து உணவு வந்தது. வலியவனிடமிருந்து இனியது வந்தது – இதுவே விடுகதை. இதன் பதிலைக் கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்’ என்றார்.
அவர்கள் விடுகதைக்கான விடை தேடி அலைந்தார்கள். மூன்று நாட்களாகியும் அவர்களால் அதன் விடையைக் கண்டு பிடிக்க முடியவே இல்லை. அவர்கள் நேராக சிம்சோனின் மனைவியிடம்வந்தனர்.
‘உன் கணவன் எங்களுக்கு ஒரு விடுகதை சொன்னான். அதன் விடையைச் சொல்லாவிட்டால் நாங்கள் அவனுக்கு முப்பது நாற்பட்டாடைகளும், முப்பது மேலாடைகளும் தரவேண்டுமாம்.’
‘சரி… விடையைக் கண்டு பிடித்தால் ?’
‘அவர் முப்பது நாற்பட்டாடைகளும், முப்பது மேலாடைகளும் தருவாராம்’
‘அப்படியானால் நல்லது தானே ? விடையைக் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டியது தானே ?’
‘நாங்கள் எங்கெங்கோ தேடிப்பார்த்துவிட்டோ ம், மூளையைக் கசக்கிப் பார்த்துவிட்டோ ம், நிறைய பேரிடம் பேசியும் பார்த்துவிட்டோ ம் யாருக்கும் விடை தெரியவில்லை’
‘அப்படியானால் தோல்வியை ஒப்புக் கொள்ளுங்கள்’
‘தோல்வியா ? நீ இந்த மனிதனை வைத்து எங்கள் உடமைகளைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுகிறாயா ? இதற்கு நீ தான் ஒரு பதில் சொல்ல வேண்டும்’
‘நானா ? ‘
‘ஆம். நீ என்ன செய்வாவோ , ஏது செய்வாயோ எங்களுக்குக் கவலையில்லை , எங்களுக்கு அந்த விடுகதைக்கான விடை உடனே தெரியவேண்டும்’ அவர்கள் கோபத்தில் உறுமினார்கள்.
‘சரி கோபப்படாதீர்கள். நான் அவரிடம் கேட்டுச் அந்த விடுகதைக்கான விடையைக் கண்டு பிடித்துச் சொல்கிறேன். அவ்வளவு தானே ? இதற்குப் போய் ஏன் கத்துகிறீர்கள் ?’ என்றாள். அவர்கள் திரும்பிச் சென்றனர்.
இரவில் அவள் சிம்சோனுடன் தனித்திருக்கையில் சிம்சோனை மயக்கும் வார்த்தைகளால் மயக்கி விடுகதைக்கான விடையைக் கண்டுபிடித்தாள். சிம்சோன் நடந்த அனைத்தையும் விளக்கினார். தன்னை உண்ண வந்த சிங்கத்திடமிருந்தே தனக்கு உணவு கிடைத்ததைச் சொன்னார். அவள் அதை அந்த இளைஞர்களிடம் சொன்னாள்.
ஏழாவது நாள்.
‘எங்கே என்னுடைய விடுகதைக்கான விடை ?’ சிம்சோன் புன்னகையுடன் கேட்டார்.
‘விடைதானே… கண்டுபிடித்து விட்டோ ம்’ அவர்கள் சிரித்தனர் ?
‘அப்படியா ? உண்பவனிடமிருந்து உணவு வந்தது. வலியவனிடமிருந்து இனியது வந்தது. இதன் பதிலைச் சொல்லுங்கள் பார்க்கலாம். இதன் விடை எனக்கு மட்டும் தான் தெரியும்’ சிம்சோன் சிரித்தார்.
‘தேனினும் இனியது எது ? சிங்கத்தினும் வலியது எது ?’ நண்பர்கள் சொல்லிவிட்டுச் சிரித்தனர்.
‘நாங்கள் உன் விடுகதைக்கான விடையைக் கண்டு பிடித்து விட்டோ மே !!! எங்கே எங்கள் பரிசு ? சீக்கிரம் கொடு…’ என்று கூறிச் சிரித்தனர்.
சிம்சோன் கோபமடைந்தான். எனக்கும் என்னுடைய மனைவிக்கு மட்டும் தெரிந்த இந்த ரகசியம் வெளியே தெரிந்திருக்கிறது. அப்படியென்றால் என் மனைவிக்கும் இந்த இளைஞர்களுக்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது. இல்லாவிட்டால் இந்த ரகசியம் எப்படி வெளியே செல்லும் ? என்று உள்ளுக்குள் பல்வேறு எண்ணங்கள் அலைமோத சிம்சோன் கடும் கோபமடைந்தார்.
‘உங்களுக்குப் பரிசு தானே வேண்டும். கொஞ்சம் பொறுங்கள்’ என்று சொல்லிவிட்டு கோபத்துடன் வெளியேறி அருகிலுருந்தஅஸ்கலோனுக்குச் சென்று கண்ணில் பட்ட முப்பது பேரைக் கொன்று அவர்களின் ஆடையை எடுத்து வந்தார். அதை பந்தயத்தில் வென்ற இளைஞர்களிடம் கொடுத்து விட்டு அதே கோபத்துடன் தன் தந்தையின் இல்லம் நோக்கிச் சென்றார்.
சிம்சோன் கோபித்துக் கொண்டு போனதை அறிந்த பெண்ணின் தந்தை வருந்தினார். தன்னுடைய மகளின் வாழ்க்கை சடுதியில் முடிந்து விட்டதே என்று மனம் உடைந்தார். மகளை வேறு யாருக்காவது உடனே மணமுடித்து வைக்கவேண்டும் என்று நினைத்து மாப்பிள்ளைத் தோழர்களாக இருந்த முப்பது பேரில் அழகாய் இருந்த ஒருவனுக்கு அவளை இரண்டாவதாக மணமுடித்து வைத்தார்.
சில நாட்கள் கடந்தன. சிம்சோனால் தன்னுடைய மனைவியைக் காணாமல் இருக்கமுடியவில்லை. கொஞ்ச நாட்களிலேயே மனம் மாறி தன் மனைவியைக் காணச் சென்றார். அவருக்கு தன்னுடைய மனைவி இன்னொருவனுக்கு வாழ்க்கைப் பட்ட செய்தி தெரியாது. நேராக பெண்ணின் வீட்டிற்குச் சென்றார். வாசலில் மாமனார் நின்றிருந்தார்.
‘நில்… எங்கே வந்தாய் ? ‘ பெண்ணின் தந்தை கேட்டார்.
‘என்னுடைய மனைவியைக் காண வந்தேன்…. ‘ சிம்சோன் பதில் சொன்னார்.
‘உன்னுடைய மனைவியா ? அது தான் வேண்டாமென்று உதறிவிட்டு ஓடி விட்டாயே ?’
‘என்னது ? வேண்டாமென்று உதறிவிட்டேனா ? யார் சொன்னது ? நான் அப்படிச் சொன்னேனா ? கணவன் மனைவிக்குள் கோபம் வருவது இயல்புதான்… வழி விடுங்கள் எனக்கு உடனே அவளைப் பார்க்க வேண்டும்’ சிம்சோன் அவசரப் பட்டார்.
‘அன்றைக்கு நீ கோபித்துக் கொண்டு ஓடி விட்டாயே ?’
‘கோபப்படுவது இயல்பு தான். அது எனக்கும் என் மனைவிக்கும் இடையே நடந்த விஷயம். இப்போது நான் அவளைச் சமாதானப் படுத்துவதற்காகத் தான் வந்திருக்கிறேன். இதோ பாருங்கள் பரிசுப் பொருட்கள்… ‘. சிம்சோன் தன்னிடமிருந்த பரிசுப் பொருட்களைக் காட்டியதும் பெண்ணின் தந்தை வருந்தினார். தான் அவசரப்பட்டுத் தவறிழைத்துவிட்டோ ம் என்று உணர்ந்து தலைகுனிந்தார்.
‘மன்னித்து விடு சிம்சோன்…. நீ திரும்பி வருவாய் என்று நினைக்கவேயில்லை’
‘பரவாயில்லை… வழி விடுங்கள். அவள் என் பிரியத்துக்குரியவள். அவளை நான் காதலித்துத் திருமணம் செய்து கொண்டிருக்கிறேன்… அவளைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை’ சிம்சோன் சொன்னார்.
‘அவள்…அவள்… இப்போது இங்கே இல்லை…’ தந்தை மெதுவாகச் சொன்னார்.
‘ஓ… வெளியே போயிருக்கிறாளா ? எங்கே போயிருக்கிறாள் ? எப்போது திரும்ப வருவாள் ?’ சிம்சோன் கேட்டார்.
‘அவள் திரும்ப வரமாட்டாள்….’
‘ஏன் ?….’ சிம்சோன் குழம்பினார்.
‘அவளை நான் வேறொருவனுக்கு மணம் முடித்து வைத்துவிட்டேன்….’ பெண்ணின் தந்தை இதைச் சொன்னதும் சிம்சோன் மிகவும் ஆத்திரமடைந்தார்.
‘என்ன ? என் மனைவியை நீங்கள் வேறொருவனுக்கு மணம் முடித்து வைத்தீர்களா ? நீங்கள் எனக்கு இப்படி ஒரு துரோகத்தை எப்படிச் செய்யலாம் ?’ சிம்சோன் கோபத்தில் கத்தினார்.
‘நீ திரும்பி வரமாட்டாய் என்று நினைத்து நான் இப்படிச் செய்து விட்டேன். உன்னிடம் கேட்டிருக்க வேண்டும். கேட்காதது தவறு தான் மன்னித்துவிடு. ஆனால் இதற்காகக் கவலைப்படாதே… அவளுடைய தங்கை ஒருத்தி இருக்கிறாள். அவள் அக்காவை விட மிகவும் அழகானவள். அவளை உனக்கு மணமுடித்து வைக்கிறேன்’ தந்தை சொன்னார்.
அதைக்கேட்ட சிம்சோன் இன்னும் அதிகமாகக் கோபப்பட்டார். கோபத்துடன் வீட்டை விட்டு வெளியேறினார்.
‘பெலிஸ்தியர்களே… உங்கள் புத்தியைக் காட்டி விட்டீர்களே… உங்களை நான் என்ன செய்கிறேன் பாருங்கள்’ என்று தங்களுக்குள்ளே கருவிக் கொண்டான்.
அன்றைக்கே அவன் சென்று முந்நூறு நரிகளைத் துரத்திப் பிடித்தான். இரண்டிரண்டு நரிகளின் வால்களைச் சேர்த்து அதில் ஒரு தீப்பந்தத்தையும் வைத்துக் கட்டினார். பின் நரிகளை பெலிஸ்தியர்களின் வயல்களுக்குள் ஓடவிட்டார். நரிகள் தீப்பந்தத்தியும் கொண்டு அங்கும் இங்கும் இழுத்துக் கொண்டே ஓடியதில் பெலிஸ்தியர்களில் வயல்கள் எல்லாம் எரிந்து சாம்பலாயின. மிகப் பெரிய அழிவு அன்று ஏற்பட்டது.
பெலிஸ்தியர்கள் ஆத்திரமடைந்தார்கள். நேராக சிம்சோனின் மாமனார் வீட்டுக்குச் சென்று,’ உங்களால் தான் அந்த இஸ்ரயேலன் எங்கள் தானியங்களை எல்லாம் அழித்தான். எனவே நீங்களும் செத்துத் தொலையுங்கள் என்று சொல்லி சிம்சோனின் மனைவியையும், அவள் தகப்பனையும் வீட்டோ டு தீயிட்டுக் கொன்றார்கள்.
தன் அருமை மனைவி கொல்லப்பட்டதை அறிந்த சிம்சோனின் கோபம் தலைக்கேறியது. ‘பெலிஸ்திய நாய்களே… என்னோடா விளையாடுகிறீர்கள். உங்களைப் பழிக்குப் பழி வாங்காமல் ஓயமாட்டேன்’ என்று பகிரங்கமாய்க் கூவினார். சிம்சோனின் வலிமையை எல்லோரும் அறிந்திருந்ததனால் யாரும் அவரை நெருங்கவில்லை.
சிம்சோன் பெலிஸ்தியர்களின் கூட்டத்துக்குள் புகுந்தார். சிங்கம் புகுந்த ஆட்டு மந்தையைப் போல அவர்கள் சிதறி ஓடினார்கள். சீறும் சிங்கத்தையே இரண்டாய்க் கிழித்த வலிமையான கைகளினால் அவர் நூற்றுக் கணக்கானோரைக் அடித்தே கொன்றார் சிம்சோன். பின் அங்கிருந்து ஏற்றாம் என்னுமிடத்திற்குச் சென்று அங்குள்ள பாறைப் பிளவு ஒன்றில் தங்கியிருந்தார்.
பெலிஸ்தியர்களின் கோபம் பன்மடங்கு அதிகரித்தது. அவர்கள் ஒரு நாட்டைப் பிடிக்கப் போவது போல சிம்சோனைப் பிடிக்கப் போனார்கள். நேராக இஸ்ரயேலர்கள் அதிகமாக இருக்கும் நகருக்குப் போய் கூடாரமடித்தார்கள்.
‘ஐயோ… என்னவாயிற்று ? ஏன் போர்வீரர்கள் இங்கே வந்திருக்கிறார்கள்’ இஸ்ரயேலர்கள் பயத்தில் அலறினார்கள்.
‘உங்கள் சிம்சோனை நீங்கள் என்னிடம் ஒப்படைத்தே ஆகவேண்டும். இல்லையேல் அவன் பெலிஸ்தியர்களை அழித்தது போல இஸ்ரயேலர்களை எல்லோரையும் நாங்கள் அழிப்போம்’ என்று கர்ஜித்தார்கள்.
‘எங்களுக்குக் கொஞ்சம் கால அவகாசம் கொடுங்கள். நாங்கள் போய் சிம்சோனைக் கட்டி உங்களிடம் கொண்டு வந்து தருகிறோம்’ இஸ்ரேலிய மக்கள் வாக்களித்தார்கள்.
‘சரி உடனே போய் சிம்சோனைக் கட்டி இழுத்து வாருங்கள்’ பெலிஸ்தியர்கள் ஆணையிட்டார்கள்.
இஸ்ரயேலர்களில் மூவாயிரம் பேர் ஒன்று கூடி சிம்சோன் இருக்கும் பாறைப்பிளவுக்குச் சென்றார்கள்.
‘சிம்சோன்… பெலிஸ்தியர்கள் தான் நம்மை ஆள்கிறார்கள் என்பதை மறந்து விட்டாயா ? அவர்களுக்கு எதிராகவே நடக்கிறாயே ? இதனால் நாம் எல்லோருமே மிகப் பெரிய இக்கட்டில் மாட்டியிருக்கிறோம்.’ மக்கள் சொன்னார்கள்.
‘அவர்கள் எனக்குச் செய்தது உங்களுக்குத் தெரியாதா என்ன ? நான் அவர்களைப் பழி வாங்கியே தீருவேன். ‘ சிம்சோன் சினம் குறையாமல் பேசினார்.
‘சிம்சோன்… தயவு செய்து நாங்கள் சொல்வதைக் கேள்.. உன்னை நாங்கள் பெலிஸ்தியரிடம் ஒப்படைக்காவிடில் நாங்கள் எல்லோரும் சாவது உறுதி. இப்போது உன் இன மக்களான எங்கள் உயிர் உன்னிடம் தான் இருக்கிறது. தயவு செய்து எங்களைக் காப்பாற்று’ என்றார்கள்.
சிம்சோன் யோசித்தார். ‘சரி.. என்னால் உங்கள் உயிர் போகவேண்டாம். என்னை நீங்கள் கயிற்றினால் கட்டி பெலிஸ்தியர்களிடம் ஒப்படையுங்கள். ஆனால் நீங்கள் என்னைக் கொல்லக் கூடாது ‘
‘சிம்சோன்… ஆண்டவர் மீது ஆணை. உன்னை நாங்கள் எதுவும் செய்ய மாட்டோ ம். உன்னைக் கட்டி பெலிஸ்தியர்களிடம் ஒப்படைப்போம். அவ்வளவே… ‘ என்றனர்.
சிம்சோன் ஒத்துக் கொண்டார். அவர்கள் சிம்சோனைக் கயிறுகளினால் பிணைத்துக் கட்டி பெலிஸ்தியர்களிடம் கூட்டிக் கொண்டுபோனார்கள். உடல் முழுவதும் கட்டப்பட்ட நிலையில் பெலிஸ்தியர்களின் முன்னால் நிறுத்தப்பட்டார் சிம்சோன். பெலிஸ்தியர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.
சிம்சோன் சிரித்தார்.’ ஏன் ஆரவாரம் செய்கிறீர்கள் மூடர்களே.. என்னையா கட்டிப் போடுகிறீர்கள்’ என்று சொல்லி உடலை முறுக்கினான். உடனே கட்டப்பட்டிருந்த கயிறுகளெல்லாம் அறுபட்டுத் தெறித்தன. அங்கே கிடந்த ஒரு கழுதையின் பச்சைத் தாடையெலும்பைக் கையிலெடுத்து கூடிநின்ற பெலிஸ்தியர்களை மூர்க்கமாகத் தாக்கினார். அங்கேயே அவர் கையில் சிக்கி ஆயிரம் பேர் இறந்தார்கள். சிம்சோன் பெலிஸ்தியர்களின் கையில் சிக்காமல் தப்பினார்.
பெலிஸ்தியர்கள் சிம்சோனை எப்படியும் பிடித்துவிட வேண்டுமென்று தவியாய்த் தவித்தார்கள். அவர் காசா நகரிலுள்ள ஒரு விலைமாதுவின் வீட்டில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அவர்கள் நகரின் மிகப் பிரம்மாண்டமான வாசல் கதவை அடைத்து அதனருகே காவல் இருந்தார்கள். எப்படியும் சிம்சோன் இந்தக் கதவைத் தாண்டாமல் வெளியே போக முடியாது. இங்கே வைத்து அவனைக் கொன்று விடவேண்டும் என்று சத்தமில்லாமல் பதுங்கி இருந்தார்கள்.
சிம்சோன் நள்ளிரவில் விலைமாதின் வீட்டை விட்டு வெளியே வந்தார். நகரின் வாசலருகே வரும்போது வாசல் கதவு பூட்டப்பட்டிருந்தது. அதன் மீது ஏறிக் குதிக்கவும் முடியாது ! அந்த அளவுக்கு உயரமானது. சிம்சோன் அந்த வாசலருகே வந்ததும் பதுங்கியிருந்தவர்கள் அவரைத் தாக்க வந்தார்கள். சிம்சோன் அசரவில்லை, இரண்டு கைகளாலும் நகரின் கதவைப் பெயர்த்து எடுத்தார். தாக்க வந்த கூட்டம் நடுநடுங்கி பின்வாங்கியது. சிம்சோன் அந்த பிரம்மாண்டக் கதவைத் தலையில் சுமந்து கொண்டே நகரிலிருந்து வெளியேறி மலையுச்சிக்குப் போனார்.
பெலிஸ்தியர்களால் சிம்சோனை நெருங்கவே முடியவில்லை. சிம்சோன் சோரேக்கு ஆற்றங்கரைப் பகுதியில் வசிக்கும் தெலீலா என்னும் பெண்ணைக் காதலிக்கிறார் என்னும் செய்தி பெலிஸ்தியர்களுக்குக் கிடைத்தது. அந்தப் பெண்ணை வைத்து சிம்சோனின் வீரத்தின் ரகசியத்தை முதலில் அறிந்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்தனர்.
பெலிஸ்திய சிற்றரசன் தெலீசாவை அணுகி அவளுக்கு ஆசை காட்டினர்.
‘நீதான் சிம்சோனைக் காதலிக்கும் தெலீசாவா ?’
‘ஆம் …. அது நான் தான்…’
‘உன்னைப் பார்த்தால் மிகவும் அழகாக இருக்கிறாய்… ஆனால் உன்னிடம் வசதி இருப்பது போலத் தெரியவில்லையே … உனக்கு ஏராளமான வெள்ளிக்காசு தந்தால் வேண்டாம் என்று சொல்வாயா என்ன ?’
தெலீசா பிரகாசமானாள்,’ எதற்காக நீங்கள் எனக்கு வெள்ளிக்காசு தருகிறீர்கள் ?’
‘சிம்சோன் மிகவும் வலிமையானவன் என்று தெரியும். அவனுடைய பலவீனம் என்ன என்பதும், எதில் அவனுடைய சக்தி அடங்கியிருக்கிறது என்பதையும் நீ கண்டறிந்து சொல்ல வேண்டும்… அவ்வளவு தான்’
‘இது மிகப் பெரிய பணியாயிற்றே… சிம்சோனிடம் உண்மையை அறிந்து கொள்வது மிகவும் கஷ்டம்….’ தெலீசா முரண்டு பிடித்தாள்.
‘ஐநூறு வெள்ளிக்காசு தந்தால் ?….’ சிற்றரசன் ஆசை காட்டினான்.
‘ஐநூறு போதாதே…. அதிகம் தந்தால் முயன்று பார்க்கலாம்’ தெலீசா சொன்னாள்.
‘சரி ஆயிரம் வெள்ளிக்காசு தருகிறேன்….’ சிற்றரசன் சொன்னான்.
‘ஆயிரம் போதாது…. ஆயிரத்து இருநூறு வெள்ளிக்காசு தந்தால் அவனுடைய பலம் எங்கே இருக்கிறது ? அவனுடைய பலவீனம் என்ன என்பதையெல்லாம் நான் கண்டறிந்து சொல்வேன்’ தெலீசா சொன்னாள்.
சிற்றரசன் ஒத்துக் கொண்டான்.
அன்று இரவு தெலீசா சிம்சோனுடன் மஞ்சத்தில் கொஞ்சுகையில் மெல்லக் கேட்டாள்.
‘சிம்சோன்… உன்னுடைய வலிமை கண்டு நான் பிரமிக்கிறேன்…உங்கள் வலிமை எதில் இருக்கிறது ? உங்களை அடக்கவே முடியாதா ?’
சிம்சோன் சிரித்தார்,’ ஏன் கேட்கிறாய் ?’
‘இல்லை … நான் உன்னுடைய ஆசை நாயகியல்லவா ? எனக்குத் தெரியாத ஒரு ரகசியம் உம்மிடம் இருக்கிறதே என்று தான்….’ தெலீசா இழுத்தாள்.
‘அதெல்லாம் பெரிய விஷயமில்லை … உலராத ஏழு நார்க்கயிறுகளால் என்னைக் கட்டினால் அவ்வளவு தான் நான் எழும்பவே முடியாது’ என்று சொன்னார்.
தெலீசா அன்று இரவே ஏழு நார்க்கயிறுகளால் அவனை இறுக்கிக் கட்டினாள். பின்
‘சிம்சோன்…சிம்சோன்… எழுந்திரு இதோ பெலிஸ்தியர்கள் வருகிறார்கள்’ என்று கத்தினாள்.
சிம்சோன் எழுந்து கைகளை விரித்தான். கட்டப்பட்டிருந்த கயிறுகள் எல்லாம் நூல் போல உடைந்து தெறித்தன.
‘எங்கே பெலிஸ்தியர்கள்’ சிம்சோன் பதட்டமாய்க் கேட்டான்.
‘நான் சும்மா தான் சொன்னேன்… நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள். பச்சை நார்க்கயிறுகள் உம்மைக் கட்டிப் போடவில்லையே…’ தெலீசா சிணுங்கினாள்.
‘உண்மையில் நீ… புதிய இரண்டு நார்க்கயிறுகளால் என்னைக் கட்ட வேண்டும்…. உலராத ஏழு நார்க்கயிறுகள் என்பது நான் சொன்ன பொய்’ சிம்சோன் சிரித்தார்.
தெலீசா கொஞ்சினாள். அன்று இரவு சிம்சோன் தூங்கிக் கொண்டிருந்தபோது அவள் புதிய இரண்டு கயிறுகளால் அவனைக் கட்டினாள். கட்டிவிட்டு முதல் நாள் கத்தியது போலவே கத்தினாள். சிம்சோன் எழுந்து உடம்பை முறுக்கியதும் கட்டுகள் எல்லாம் அறுந்து தெறித்தன.
தெலீசா மீண்டும் சிணுங்கினாள்,’ எப்போதும் என்னிடம் பொய்தான் சொல்கிறீர்கள். புதிய கயிறுகள் கூட உம்மைக் கட்டிப் போடவில்லையே.. உண்மையைச் சொல்லுங்கள் ‘
‘உண்மையைச் சொல்வதானால் என்னுடைய தலையில் இருக்கும் ஏழு ஜடைகளையும் நெசவு நூல் பாவுடன் பின்னிவிட்டால் போதும். என்னுடைய வலிமைகள் எல்லாம் போய்விடும்’ சிம்சோன் சொன்னார்.
தெலீசா அவ்வாறே செய்துபார்க்க அதுவும் பொய் என்று அறிந்து கொண்டாள்.
அதன் பின் தினமும் அவரை நச்சரித்து வந்தாள். இரவில் மஞ்சத்தில் சிம்சோனிடம் வழக்கிட்டுக் கொண்டே இருந்தாள்.
‘என்னை நீங்கள் அற்பமாய் நினைத்து விட்டீர்கள்.. நான் உங்களுக்கு இவ்வளவு உண்மையாய் இருக்கிறேன். நீங்கள் என்னை மதிக்கவேயில்லை’
‘நீ என்னுடைய காதலி. நான் உன்னை என் உயிராய் நினைக்கிறேன்.. நீ ஏன் இப்படிச் சொல்கிறாய் ?’
‘நான் உங்கள் உயிரென்பது உண்மையென்றால் எனக்கு அந்த ரகசியத்தைச் சொல்லவேண்டும்’
‘அது எதற்கு தெலீசா ?’ சிம்சோன் தயங்கினார்.
‘நான் என்ன உங்களைக் கொல்லவா போகிறேன். உங்கள் ரகசியங்கள் எல்லாவற்றையும் என்னிடம் சொல்லிவிட்டீர்கள் என்று மகிழ்வேன்.. அவ்வளவு தான்… ‘சிம்சோனின் மார்பில் அவளுடைய விரல்கள் கோலம் போட்டன.
அவளுடைய கொஞ்சல்களில் மயங்கியும், அவளுடைய திட்டுகளில் வருத்தமுற்றும் சிம்சோன் உண்மையைச் சொல்வதென்று முடிவெடுத்தார்.
‘நான் உண்மையை உனக்குச் சொல்கிறேன்.. ஆனால் நீ யாரிடமும் அந்த ரகசியத்தைச் சொல்லக் கூடாது. அது என்னுடைய உயிருக்கே ஆபத்தாய் முடியும்’ சிம்சோன் சொன்னான்
‘நீங்கள் என்னை நம்பலாம். என் உயிரே போனாலும் நான் இந்த ரகசியத்தை நான் யாரிடமும் சொல்லமாட்டேன்; தெலீசா அவனை மடியில் கிடத்திக் கொஞ்சினாள்.
‘நான் கடவுளால் பிறந்தவன். கடவுளுடைய நசரேயன்… அவருடைய பணியாளன். என்னுடைய தலைமுடியில் தான் என்னுடைய பலமே அடங்கியிருக்கிறது. முடி போனால் என் வலிமையும் என்னைவிட்டுப் போய்விடும்’ சிம்சோன் சொன்னார். தெலீசா அவனை மோகத்தில் குளிப்பாட்டினாள். இரவில் சிம்சோன் அசந்து தூங்கியபோது அவனுடைய தலையை மொட்டையடித்தாள். பின் பெலிஸ்தியர்களுக்கு ஆளனுப்பினாள்.
‘சிம்சோன் எழுந்திரு… இதோ பெலிஸ்தியர்கள் வருகிறார்கள்’ தெலீசா கத்தினாள்.
சிம்சோன் எழுந்தார்,’ யார் வந்தால் என்ன எல்லோரையும் அழிப்பேன்’
‘அதற்கு உன்னுடைய தலைமயிர் உன்னிடம் இல்லையே…’ தெலீசா நகைத்தாள்.
சிம்சோன் தன்னுடைய தலையைத் தடவிப்பார்த்து அதிர்ந்தார். ‘ ஐயோ… உன்னை நால் மலை போல நம்பினேனே… இப்படி நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டாயே…’ சிம்சோன் ஏமாற்றப்பட்டதை நினைத்து அழுதார்.
‘எனக்கு வரப்போகும் வசதிக்காக உன்னுடைய மயிரை மழித்துவிட்டேன் சிம்சோன்… இன்னும் சிறிது நேரத்தில் பெலிஸ்தியர்கள் இங்கே வருவார்கள் தயாராய் இரு…’ தெலீசா சிரித்தாள்.
அதற்குள் பெலிஸ்தியர்கள் படையுடன் வந்து அவரைச் சூழ்ந்தனர். சிம்சோன் பழைய நினைப்பில் ஒருவனை அடித்தார், ஆனால் அந்த அடிக்கு வலு இருக்கவில்லை. அவர்கள் சிம்சோனை ஒரு ஆட்டுக் குட்டியைப் பிடிப்பதுபோல எளிதாகப் பிடித்தார்கள்.
‘நீதான் வீரனா ? பெலிஸ்தியர்களை அழிக்கப் பிறந்தவனா ?’ என்று சொல்லி அவனை அடித்துக் குற்றுயிராக்கினார்கள். சிம்சோன் வலியால் துடித்தார்.
பெலிஸ்தியர்கள் சிம்சோனை பிடித்து நிறுத்தி அவனுடைய கண்களைத் தோண்டி எடுத்தார்கள். சிம்சோன் கதறினார். அவரை அவர்கள் சிறையில் அடைத்து சங்கிலிகளால் பிணைத்தனர். அவரைக் கேலிப்பொருளாக்கி மாவரைக்கும் வேலையைச் செய்ய வைத்தார்கள்.
சிம்சோன் உள்ளுக்குள் அழுதுகொண்டே மாவரைத்துக்கொண்டிருந்தார். அவரை பெலிஸ்தியர்கள் அவ்வப்போது அழைத்து சபையில் நிற்கவைத்து அவமானப் படுத்துவதை வழக்கமாக்கிக் கொண்டார்கள். சிம்சோன் நிராயுதபாணியாய் நின்றார்.
மொட்டையடிக்கப் பட்டிருந்த அவருடைய தலைமுடி வளரத் துவங்கியது ! பெலிஸ்தியர்கள் அதைக் கவனிக்கவில்லை. தலைமுடி வளர வளர சிம்சோன் தான் இழந்த வலிமையைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெற்றுக் கொண்டிருந்தார்.
பெலிஸ்தியர்கள் சிம்சோனைத் தங்கள்வசம் ஒப்படைத்த அவர்களின் கடவுளுக்கு மிகப் பெரிய விழா எடுப்பதற்காக ஒரு பெரிய மண்டபத்தில் ஒன்றுகூடினார்கள்.
‘சிம்சோனை அழைத்து வாருங்கள். வீராதி வீரனை நாம் அவமானப் படுத்துவோம்’ பெலிஸ்தியர்கள் சொல்லிச் சிரித்தார்கள்.
சிம்சோன் அழைத்துவரப்பட்டார். மக்களெல்லாம் குழுமியிருந்த மிகப்பெரிய மண்டபத்தின் நடுவே நிற்கவைக்கப் பட்டார்.
‘வீராதி வீரனே…. எங்கே உன் வீரம் ?’ பெலிஸ்தியர்கள் சொல்லிக் கொண்டே அவரை அடித்தார்கள். சிம்சோன் தடுமாறி விழுந்தார்.
‘என்னால் நிற்க முடியவில்லை… தயவு செய்து என்னை ஒரு தூணில் என்னை சாய்த்து நிறுத்துங்கள்…’ சிம்சோன் பரிதாபமாகக் கேட்டார்.
‘பெலிஸ்தியர்களைச் சாய்க்கும் வீரனைத் தூணில் சாய்த்து வையுங்கள்…. ‘ என்று சொல்லி எல்லோரும் பலமாகச் சிரித்தார்கள்.
அவர்கள் சிம்சோனை இழுத்து, ‘இதோ இந்த இரண்டு தூண்களையும் பிடித்துக் கொள்’ என்று சொல்லி அவருடைய வலது கையை ஒரு தூணிலும், இடது கையை இன்னொரு தூணிலுமாக இரண்டு பெரிய தூண்களில் பிடித்து வைத்தார்கள். வைத்துவிட்டு அவரை எள்ளி நகையாடினார்கள்.
சிம்சோன் உள்ளுக்குள் ஆண்டவரை நோக்கி உருக்கமாய் மன்றாடினார்.
‘ஆண்டவரே… இந்த ஒருமுறை மட்டும் எனக்குப் பழைய பலத்தைத் தாரும். இந்த பெலிஸ்தியர்களின் கொட்டத்தை அடக்க எனக்கு உதவிசெய்தருளும்’ என்று வேண்டினார்.
கடவுளின் அருள் அவர்மீது வந்திறங்கியது. அவருடைய முழு வலிமையும் அவருக்குள் திரும்ப வந்தது.
‘பெலிஸ்தியர்களைக் கொல்வதற்காக என் உயிரைக் கொடுப்பதில் மகிழ்கிறேன்’ என்று சொல்லிக் கொண்டே இரண்டு கைகளிலும் தன் முழுபலத்தையும் இறக்கி இரண்டு தூண்களையும் பலமாய்ச் சாய்த்தார்.
தூண்கள் இரண்டும் சாயத் துவங்கின. மண்டபத்தில் இருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் திகிலடைந்தார்கள். அதற்குள் மண்டபத்தின் கூரை மொத்தமாய் அவர்கள் மேல் விழுந்து நசுக்கியது. மண்டபம் தரைமட்டமானது. அனைவரும் அதே இடத்தில் இறந்தார்கள்.
சிம்சோனும் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இறந்தார்.
சிம்சோனின் வழியாக கடவுள் தங்களை பெலிஸ்தியரிடமிருந்து மீட்டார் என்று இஸ்ரயேலர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக