சனி, 19 டிசம்பர், 2015

தீத்து - ?மேய்ப்பர்களுக்கான மூன்றாவது வழிக்காட்டி புத்தகம்

மேய்ப்பர்களுக்கான மூன்றாவது வழிக்காட்டி புத்தகம்

           🌹 தீத்து 🌹

☀ மூல மொழியாகிய கிரேக்கத்தில் இப்புத்தகம் “Epistole pros Titon” (Letter [Epistle] to Titus) என்று அழைக்கப்படுகிறது.

☀ நம்முடைய பரிசுத்த வேதாகமத்திலே 56-வது புத்தகமாக வருகிறது.

☀ பவுலுக்கும் தீத்துவுக்கும் இருந்த கூட்டுறவைப் பற்றி தீத்து புத்தகம் மிகக் குறைவாகவே பேசுகிறது. ஆனால், பவுலின் மற்ற நிருபங்களில் தீத்துவைப் பற்றி சொல்லப்பட்ட குறிப்புகளிலிருந்து அதிக தகவலை திரட்டலாம்.

☀ கிரேக்கனாகிய தீத்து அடிக்கடி பவுலுடன் சென்றார், குறைந்தது ஒரு சந்தர்ப்பத்திலாவது அவரோடு எருசலேமுக்கு சென்றார். (கலா. 2:1-5)

☀ பவுல் அவரை ‘எனக்குக் கூட்டாளியும் உடன்வேலையாளும்’ என்பதாக குறிப்பிடுகிறார். எபேசுவிலிருந்து பவுல் கொரிந்தியருக்கு முதல் நிருபத்தை எழுதிய பின்பு தீத்துவையே கொரிந்துவுக்கு அனுப்பியிருந்தார்.

☀ கொரிந்துவில் இருந்தபோது, எருசலேமிலிருந்த சகோதரருக்காக காணிக்கை சேர்ப்பதில் தீத்து சம்பந்தப்பட்டிருந்தார்.

☀ இதன் பிறகு அந்த வசூலை முடிக்க பவுலின் கட்டளையின்பேரில் அவர் திரும்பிச் சென்றார். மக்கெதோனியாவில் பவுலை சந்தித்துவிட்டு, கொரிந்துவுக்குத் திரும்பி வரும்போதே, பவுல் எழுதிய இரண்டாம் நிருபத்தை கொரிந்தியருக்கு கொண்டுசெல்ல தீத்து பயன்படுத்தப்பட்டார். (2 கொ. 8:16-24; 2:13; 7:5-7).

☀ ரோமில் முதல் சிறையிருப்பிலிருந்து பவுல் விடுதலை செய்யப்பட்டார். அதன் பின்பு அவர் தன்னுடைய ஊழியத்தின் கடைசி வருடங்களில் மறுபடியும் தீமோத்தேயுவுடனும் தீத்துவுடனும் கூட்டுறவு கொண்டார்.

☀ கிரேத்தாவிலும் கிரேக்கிலும் மக்கெதோனியாவிலும் செய்த சேவையும் இதில் உட்படுவதாக தெரிகிறது.

☀ கடைசியாக, பவுல் கிரேக்கு தேசத்துக்கு வடமேற்கில் இருந்த நிக்கொப்போலிக்கு செல்வதாக பேசப்பட்டிருக்கிறது. அங்கே அவர் கைது செய்யப்பட்டு, கடைசி சிறையிருப்புக்கும் கொலை செய்யப்படுவதற்கும் ரோமாபுரிக்குக் கொண்டு செல்லப்பட்டதாக தெரிகிறது.

☀ கிரேத்தாவுக்கு பவுல் சென்றபோதே, “குறைவாயிருக்கிறவைகளை ஒழுங்குபடுத்தும்படிக்கும்,... பட்டணங்கள்தோறும் மூப்பரை ஏற்படுத்தும்படிக்கும்” தீத்துவை அவர் விட்டுவந்திருந்தார். இதுவே அவர் தீத்துவுக்கு கொடுத்த கட்டளை.

☀ தீத்துவை கிரேத்தாவில் விட்டுவந்த சிறிது காலத்துக்குப் பின்பே, பெரும்பாலும் மக்கெதோனியாவிலிருந்து பவுலின் இந்த நிருபம் எழுதப்பட்டதாக தெரிகிறது. (தீத். 1:5; 3:12; 1 தீ. 1:3, 4; 2 தீ. 4:13,20)

☀ ஒன்று தீமோத்தேயு போலவே இதுவும் ஒரு நோக்கத்தை நிறைவேற்றியதாக தெரிகிறது. அதாவது, பவுலின் உடனுழைப்பாளனுக்கு உற்சாகமூட்டுவதற்கும் அவருடைய கடமைகளுக்கு அதிகாரப்பூர்வ ஆதரவை அளிப்பதற்கும் உதவியது.

☀ ரோமில் பவுலின் முதலாம் மற்றும் இரண்டாம் சிறையிருப்பின்போது, அல்லது பெரும்பாலும் கி.பி. 61-64-க்கு இடைப்பட்ட சமயத்தில், இந்த நிருபத்தை அவர் எழுதியிருக்க வேண்டும்.

☀ ஒன்று மற்றும் இரண்டு தீமோத்தேயு, தீத்து இந்த வேதாகம புத்தகங்கள் மூன்றும் பவுலின் “குருத்துவ நிருபங்கள்” (pastoral letters) என அடிக்கடி குறிப்பிடப்படுகின்றன. எழுத்துநடை ஒன்றுபோலவே உள்ளது.

☀ ஜான் ரைலன்ட்ஸ் நூலகத்தில் நாணற்புல் கையெழுத்து பிரதியின் பாகம் P32 ஒன்றுள்ளது. இது ஏறக்குறைய கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் கோடெக்ஸ் தாளாகும், இதில் தீத்து 1:11-15-ம் 2:3-8-ம் உள்ளது.

☀ “கடவுளின் அடியானும்... இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலனுமான பவுல் பொதுவான விசுவாசத்திலே என் உத்தமபிள்ளை தீத்துக்கு எழுதுவது.” (தீத். 1:1,2) உடன் ஊழியனாகவும் நீண்டகாலம் தோழனாகவும் இருந்த தீத்துவுக்கு எழுதின பவுலின் நிருபம் இவ்வாறுதான் தொடங்குகிறது.

☀ சபைகளை நன்றாக ஒழுங்குபடுத்துவதற்கு அவரை கிரேத்தா தீவில் பவுல் விட்டுவந்திருந்தார். தீத்துவிடம் பெரிய வேலை ஒப்படைக்கப்பட்டிருந்தது.

☀ இந்தத் கிரேத்தா தீவு, “தேவர்கள் மற்றும் மனிதர்களின் பிதா”வினுடைய பூர்வீக வாசஸ்தலம் என சொல்லப்படுகிறது.

☀ “கிரேத்தனையே ஏமாற்றுபவன்” என்ற வழக்கச் சொல்லுக்கு பிறப்பிடமாக இத்தீவு திகழ்கிறது. இதன் அர்த்தம், “நயவஞ்சகனையே வஞ்சிப்பது.”

☀ அந்த ஜனங்களின் உண்மையற்ற குணமே பழமொழியானது. ஆகவே, “கிரேத்தா தீவார் ஓயாப் பொய்யர், துஷ்டமிருகங்கள், பெருவயிற்றுச் சோம்பேறிகள்” என்று அவர்களுடைய தீர்க்கதரிசி சொன்னதையே பவுல் மேற்கோளாக குறிப்பிட்டார். (1:12)

☀ பவுலின் நாளிலிருந்த கிரேத்தா தீவார் இவ்வாறாகவும் விவரிக்கப்பட்டுள்ளனர்: “நிலையற்று, நேர்மையற்று இருப்பது, சண்டையிடுவது ஆகியவையே அந்த ஜனத்தின் குணம். பேராசைக்கும், காமவெறிக்கும், பொய்மைக்கும், குடிவெறிக்கும் பேர்போனவர்கள். அவர்களுடன் வாழ்ந்த யூதர்கள் ஒழுக்கக்கேட்டில் அந்த தீவில் வாழ்ந்தவர்களையும் மிஞ்சிவிட்டதாக தெரிகிறது.”

☀ இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் கிரேத்தா சபைகள் உருவாகியிருந்தன. ஆகவே, “அவபக்தியையும் லெளகிக இச்சைகளையும் வெறுத்து, தெளிந்த புத்தியும் நீதியும் தேவபக்தியும் உள்ளவர்களாய்... ஜீவனம்பண்”ணும்படி பவுல் புத்திமதி கூறியது அங்குள்ள விசுவாசிகளுக்கு மிகவும் அவசியமாயிருந்தது. (2:12).

☀ மொத்தம் 3 அதிகாரங்களும், 46 வசனங்களையும் கொண்டுள்ளது.

☀ முதலாவது அதிகாரம் பெரிய அதிகாரமாகவும், 2-ம் மற்றும் 3-ம் அதிகாரங்கள் சிரிய அதிகாரங்களாகவும் உள்ளது.

☀ பரிசுத்த ஆவியானவர் மேய்ப்பர்களிடம் எதை எதிர்பார்க்கிறார் என்பதைக் குறித்து 1 தீமோத்தேயு 3:2-7 சொல்வதை தீத்து 1:5-9 நிறைவாக்குகிறது.

☀ மேய்ப்பன் “உண்மையான வசனத்தை நன்றாய்ப் பற்றிக்கொள்ளுகிறவ”ராயிருந்து சபையில் போதிக்கிறவராக இருக்க வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது. எல்லாரையும் முதிர்ச்சிக்கு வழிநடத்துவதற்கு இது எவ்வளவு அவசியம்! சொல்லப்போனால், சரியான போதகத்துக்கான இந்தத் தேவையை தீத்துவுக்கு எழுதப்பட்ட இந்த நிருபம் பல தடவை அறிவுறுத்துகிறது.

☀ ‘ஆரோக்கியமான உபதேசத்துக்கேற்றவைகளைப் பேசும்படி’ பவுல் தீத்துவுக்கு அறிவுரை கூறுகிறார்.

☀ முதிர்வயதுள்ள பெண்கள் “நற்காரியங்களைப் போதிக்கிறவர்க”ளாக இருக்க வேண்டும், அடிமைகள் தங்கள் “இரட்சகராகிய கடவுளின் உபதேசத்தை எல்லாவற்றிலும் அலங்கரிக்க வேண்டும்.” (தீத். 1:9; 2:1,3,10)

☀ மேய்ப்பனாகிய தீத்து, தன் போதகத்தில் உறுதியாகவும் பயமற்றவராகவும் இருப்பதன் அவசியத்தை பவுல் அறிவுறுத்துகிறார்.

☀ மேலும், “இவைகளை நீ பேசி, போதித்து, சகல அதிகாரத்தோடும் கடிந்துகொ”ண்டிரு என்று அவர் சொல்கிறார்.கீழ்ப்படியாதவர்களுடைய விஷயத்தில், ‘விசுவாசத்திலே ஆரோக்கியமுள்ளவர்களாக இருக்கும்படி, நீ அவர்களை கண்டிப்பாக கடிந்துகொள்’ என்பதாகவும் சொல்கிறார். (2:15)

☀ இவ்வாறு தீத்துவுக்கு பவுல் எழுதிய நிருபம் “உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும்” முக்கியமாக பயனுள்ளது. (தீத்.1:14; 2 தீ. 3:17).மேய்ப்பர்களுக்கான மூன்றாவது வழிக்காட்டி புத்தகம் - தீத்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பயணங்கள் பலவகை 7th கட்டுரை

பயணங்கள் பலவகை DOWNLOAD